கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை தமிழகம் வந்தடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டமானது காணொளி காட்சி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் ஜனவரி மாதத்திற்கு தேவையான 4 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு தண்ணீர் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தானது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 400 கனஅடியாக இருந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பால் மாலை நிலவரப்படி விநாடிக்கு 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்தும், வறண்டு காணப்பட்ட பெரிய பாணி பகுதியில் தற்போது சிறு சிறு அருவிகள் தோன்றியுள்ளன. மேலும் தொடர்ந்து ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.