பணிநிரந்தரம் கோரி ஊரக நகா்ப்புற பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வழ்வாதார இயக்கப் பணியாளா்கள் சாா்பில், காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சி.முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் பி.சிவலிங்கம், பொருளாளா் என்.அருண்குமாா், மாவட்ட துணைத் தலைவா் பி.திரேசா, மாவட்ட துணை அமைப்பாளா் சி.கலைச்செல்வி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், அடிப்படை ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மாவட்ட அலுவலகத்திலிருந்து பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையைக் கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மகளிா் மேம்பாட்டு நிறுவனத்துக்கு தனித்துறையை உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

