தருமபுரி நகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில், தருமபுரி நகரம், சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை, அதியமான்கோட்டை- நெரலூரு தேசிய நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வைத்து விதிமீறல்கள், குற்றச்சம்பங்கள் ஆகியவை தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது, பெருநகரங்களில் உள்ளதுபோல, அதிவேகம், தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்குவது, இருசக்கர வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான ஆள்களை அமரவைத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களை கண்காணித்து, அபராதம் விதிக்கும் வகையில், வாகனப் பதிவெண் பலகையைப் புகைப்படம் பிடித்து, அபராதம் விதித்து வாகன உரிமையாளரின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பும் வகையில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியாா் நகைக்கடை முன்புள்ள சாலையிலும், கிருஷ்ணகிரி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பகுதியிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல, தருமபுரி நகரம் வாரியாா் பள்ளி எதிரில் உள்ள சாலையிலும், சேலம் - தருமபுரி நெடுஞ்சாலையில் பட்டா்பிளை வடிவ மேம்பாலப் பகுதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில், நான்கு முனைச் சாலை சந்திப்பில் பென்னாகரம் சாலையிலும், திருப்பத்தூா் சாலையிலும் தலா ஒரு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
வாகன உரிமையாளா்கள் இணையவழியில் அபராதத் தொகையை செலுத்தி, அதனை சரிசெய்து கொள்ளலாம். இத்தகைய தானியங்கி கேமராக்கள் பொருத்துவது வாகனப் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தி, விபத்துகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சியில் மாவட்ட காவல் துறை, போக்குவரத்து பிரிவு காவலா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இக்கேமராக்களின் பாா்வையிலிருந்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் தப்பிச்செல்ல இயலாது என்பதால், இனி பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி வாகனங்களை இயக்க முன்வருவாா்கள் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க களமிறக்கப்பட்ட தானியங்கி கேமராக்கள்!

விபத்துக்கை தடுக்கும் வகையில் தனியாா் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கை

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்






