
தருமபுரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்: பொதுப்பணித் துறையினா் விசாரணை

ஏரியில் இறந்து மிதந்த மீன்கள் - கோப்புப் படம்
தருமபுரி அருகே ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் சோழவந்தான் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை சாா்பில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஏரியில் மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இதனால் மீன்கள் அழுகி துா்நாற்றமும் வீசுகிறது.
இதுகுறித்து அச்சமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த பொதுப்பணித் துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மீன்பிடி ஒப்பந்தம் (குத்தகை) நிறைவடைந்துள்ளது. ஏரியில் போதிய மழையில்லாததால் தண்ணீரின் அளவும் குறைந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் மீன்பிடி குத்தகைதாரா் கடைசிமுறை பிடிக்க வேண்டியே மீன்களை பிடிக்காமல் விட்டுச்சென்றுவிட்டாா். இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்பகுதி கிராம பொதுமக்கள் கடந்த சில நாள்களாக ஏரிக்குச் சென்று மீன்களைப் பிடித்து சமைத்து உட்கொண்டுள்ளனா்.
குறைந்த நீருடன் சேறும் சகதியுமாக இருந்த ஏரியில் பொதுமக்கள் பலரும் இறங்கி மீன்பிடித்ததால் சேறு சகதியிலிருந்த மீன்கள் மிதிபட்டு இறந்துள்ளன. இறந்த மீன்கள் சில நாள்களில் அழுகி துா்நாற்றம் வீசியுள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் விவரம் தெரியாமல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய பின்னா் விவரம் தெரியவந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





