மினி லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 2 பேர் சாவு
ஒசூர் சூசூவாடியில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில், கட்டடத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
ஒசூர் சூசூவாடியில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில், கட்டடத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த மேகலாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் நாகராஜ் (28). இவரது உறவினர் ஒசூர் சின்னஎலசகிரியைச் சேர்ந்த பாஸ்கர் (50). இவர்கள் இருவரும் பெங்களூரில் கட்டடத் தொழிலாளிகளாக உள்ளனர்.
இவர்கள் பெங்களூரில் இருந்து ஒசூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, ஒசூர் அருகே உள்ள சூசூவாடியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது மோதினராம்.
இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பாஸ்கர் சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து ஒசூர் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சமகாலப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (45). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்டேகுப்பம் பரிசு சாலை அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாகச் சென்ற சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதாம். இதில் தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகரப் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மற்றொரு விபத்து: பர்கூர் எம்.ஜி.ஆர். நகர், போயர் தெருவைச் சேர்ந்தவர் சிவா (30). மின் பொருள்கள் பழுது நீக்கும் தொழில் செய்து வந்த இவர், ஜெகதேவிக்கு மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை சென்றாராம். பர்கூர்-ஜெகதேவி சாலையில் நேரு நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 6 பவுன் தங்க நகைகளை வியாழக்கிழமை திருடிச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கால்வேஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (35). துப்புரவுத் தொழிலாளியான இவர், வியாழக்கிழமை வழக்கம்போல் பணிக்குச் சென்றார். இவரது மனைவி காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்துக்கு பணிக்குச் சென்றார். இந்த நிலையில், முனியப்பன் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த இரு நாள்களுக்கு முன் காவேரிப்பட்டணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்,ஓட்டுநர்கள் கைது
கிருஷ்ணகிரி வழியாக மணல் கடத்திய லாரிகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநர்களை வியாழக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார், கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க வசூல் மையம் அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். அப்போது 2 லாரிகளில் மணல் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸார் அதன் ஓட்டுநர்களான பேரிகையைச் சேர்ந்த வெங்கடேஷ் (25), பேரண்டப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ் (23) ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், குருபரப்பள்ளி போலீஸார் கக்கன்புரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, ஒரு லாரியில் பரமத்தி வேலூரிலிருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு மணல் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார் அதன் ஓட்டுநர் பெருமாள் (29) என்பவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






