விளைநிலங்களில் கெயில் நிறுவனக் குழாய்களைப் பதிக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அதே உறுதியை தமிழக ஆட்சியாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
ஒசூரில் அந்த அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்ட எதிர்ப்பு மாநாட்டில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நில உபயோகிப்பாளர்களின் உரிமைச் சட்டம், வழித்தடை உரிமைச் சட்டம், வன விலங்குச் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் நீக்க வேண்டும் அல்லது அவற்றில் திருத்தங்கள் செய்து தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து சட்ட திருத்தம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் விவசாயிகள் கவன ஈர்ப்பு பேரணியை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி, விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாலு, மாநிலப் பொதுச் செயலர் கந்தசாமி, மாவட்டத் தலைவர் ராமரெட்டி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஸ்ரீராம் ரெட்டி, மாவட்டச் செயலர் சென்னைய நாயுடு, பொருளாளர் வி.சி.சண்முகம், தருமபுரி மாவட்டத் தலைவர் செங்கோடன், ஒசூர் ஒன்றியச் செயலர் நாராயணப்பா, தளி ஒன்றியச் செயலர் கணேஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.