ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

வேகமாக வளர்ந்து வரும் ஒசூரை புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்
Updated on
1 min read

வேகமாக வளர்ந்து வரும் ஒசூரை புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலையிடமாகக் கொண்டு 33-ஆவது புதிய மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். 
அதுபோல,  கிருஷ்ணகிரி மாவட்டத்தை 2 ஆகப் பிரித்து ஒசூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தளி தொகுதி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கூறியதாவது:
 ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.  அஞ்செட்டி வட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டுமெனில், பொதுமக்கள் 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேருந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது.
குறிப்பாக, அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.  3 பேருந்துகள் இதற்காக பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.  
அதுபோல மலைக் கிராமமான கேரட்டி, ஜவளிகிரி, மஞ்சுகொண்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதற்கு 200 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது.  எனவே, ஒசூரை தலையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை  அரசு அறிவிக்க வேண்டும்.
ஒசூர் நகரமன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஏ. சத்யா கூறியதாவது: ஒசூர் தொகுதியில் மட்டுமே சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.  அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
ஐஎன்டியுசி மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் கூறியது:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட அஞ்செட்டி  வட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தின் பரப்பளவு கொண்டதாகும்.  மிகப் பெரிய பரப்பளவு கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை 2 ஆகப் பிரித்து கிருஷ்ணகிரி,  பருகூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, காவேரிப்பட்டணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி கிருஷ்ணகிரியை தலையிடமாகக் கொண்டு தற்போதுள்ள கிருஷ்ணகிரி மாவட்டமாகத் தொடர வேண்டும்.
அதேபோன்று ஒசூரைத் தலைமையிடமாகக் கொண்டு வேப்பனஹள்ளி, சூளகிரி,  ராயக்கோட்டை,  ஒசூர், தேன்கனிக்கோட்டை,  தளி, கெலமங்கலம், அஞ்செட்டி, பாகலூர், பேரிகை ஆகிய பகுதிகளை இணைத்து புதிய மாவட்டமாக ஒசூரை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் தென் இந்திய துணைத் தலைவர் வி.ஞானசேகரன் 
கூறியது: சூளகிரியில் தொடங்கப்படவுள்ள 3-ஆவது சிப்காட்,  தனியார் பங்களிப்புடன் குந்துமாரனப்பள்ளியில் 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்படவுள்ள புதிய சிட்கோ தொழில்பேட்டை,  போலுப்பள்ளி புதிய சிட்கோ, ஐடி பார்க் ஆகியவற்றால் ஒசூரில் மேலும் அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.  தொழில்பேட்டைகளும் விரிவடைந்து வருவதால், ஒசூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com