காவேரிப்பட்டணம் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையோரமாக நிறுத்தப்பட்ட லாரியை ரூ. 30 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களுடன் திருடிச் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை உசிலம்பட்டி, எழுமலை நகரைச் சேர்ந்தவர் பெரிய கருப்பு. லாரி ஓட்டுநர். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெங்களூரிலிருந்து கேரள மாநிலம், கொச்சி நோக்கி வீட்டு உபயோகப் பொருள்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலையோராக லாரியை நிறுத்தினார். சிறிது நேரத்துக்குப் பிறகு, திரும்பி வந்து பார்த்தபோது, லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் லாரி கிடைக்காத நிலையில், இதுகுறித்து, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து, வழக்குப் பதிந்த காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே லாரி நிற்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் லாரியை மீட்டனர்.
காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான தனிப் படையினர் மேற்கொண்ட விசாரணையில், குற்றவாளிகள் கர்நாடகத்தில் மறைந்திருப்பது தகவல் அறிந்ததும் அங்கு சென்ற போலீஸார் கோலார் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்களான நரேஷ் (26), மது (21), ஒசகோட்டாவைச் சேர்ந்த சஞ்சய் (21) ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சுகாஷ் என்பவரைத் தேடி வருகின்றனர். மேலும், லாரி திருட்டுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை கைது செய்த தனி ப்படையினரை காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








