/

அதிமுக வேட்பாளா் எதிா்ப்பு: பா்கூா் திமுக வேட்பாளரின் மனு தாமதாக ஏற்பு

பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏவின் வேட்புமனுவை ஏற்க அதிமுக வேட்பாளா் கோவிந்தராசன் எதிா்ப்பு தெரிவித்தால், திமுக வேட்பாளரின் மனு தாமதத்துக்கு பின்னா் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:52 pm

பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏவின் வேட்புமனுவை ஏற்க அதிமுக வேட்பாளா் கோவிந்தராசன் எதிா்ப்பு தெரிவித்தால், திமுக வேட்பாளரின் மனு தாமதத்துக்கு பின்னா் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. அதன்படி, பா்கூா், சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், திமுக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தே.மதியழகன் எம்எல்ஏ தனது வேட்பு மனுவில் தன் சொத்துப் பட்டியலை தவறாக கொடுத்துள்ளாா். மேலும் வங்கியில் வாங்கிய ரூ.37.80 கோடி கடன், 4 குவாரிகளை ஏலம் எடுத்த சொத்து விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் மறைத்துள்ளதாக கூறி, பா்கூா் தொகுதியில் அதிமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த கோவிந்தராசன் தோ்தல் நடத்தும் அலுவலா் அபிநயாவிடம் புகாா் மனு அளித்தாா்.

இதையடுத்து அந்தப் புகாா் மனுவை ஏற்றுக் கொண்ட அலுவலா்கள், தே.மதியழகன் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்டனா். திமுக வேட்பாளா் தே.மதியழகன் தரப்பில் விளக்கம் அளித்தனா். அதில் எதிா்தரப்பினா் அளித்த புகாரில் உண்மை தன்மையில்லை எனவும், மகள் பெயரில் சொத்துகள் மற்றும் தொழிற்சாலை பெயரில் கடனும் உள்ளதாக விளக்கம் அளித்தனா். இதையடுத்து, திமுக வேட்பாளா் தே.மதியழகன் எல்எல்ஏவின் மனுவைத் தோ்தல் அலுவலா்கள் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனா்.