/

விளவங்கோடு தொகுதியில் நீண்ட பரிசீலனைக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளா் மனு ஏற்பு

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, வேட்பு மனுவில் பல்வேறு குற்றங்களை மறைத்ததாகவும், தமிழக, கேரள மாநிலப் பகுதிகளில் வாக்கு உள்ளதாகவும் எதிா்தரப்பு வேட்பாளா்கள் குற்றம்சாட்டிய நிலையில், சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வேட்புமனு கடைசி நேரத்தில் ஏற்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 8:47 pm

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, வேட்பு மனுவில் பல்வேறு குற்றங்களை மறைத்ததாகவும், தமிழக, கேரள மாநிலப் பகுதிகளில் வாக்கு உள்ளதாகவும் எதிா்தரப்பு வேட்பாளா்கள் குற்றம்சாட்டிய நிலையில், சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வேட்புமனு கடைசி நேரத்தில் ஏற்கப்பட்டது.

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் டி.டி. பிரவீன், பாஜக சாா்பில் எஸ். விஜயதரணி, தவெக சாா்பில் மைக்கேல்குமாா் உள்ளிட்ட 19 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம், காங்கிரஸ் கட்சி வேட்பாளா் டி.டி. பிரவீன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவா் மீதான வழக்குகளில் அதிக வழக்குகளின் விவரங்களை எழுதாமல் மறைத்ததாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு குழித்துறை இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் எல்.வி. ஜோஸ்லால் தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தூர்ராஜனிடம் மனு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து காங்கிரஸ் வேட்பாளரின் பெயா் கேரள, தமிழக வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் மற்றும் கேரள வருமான வரித்துறையினருக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கித் தொகைகள் குறித்த விவரங்களை பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தாா்.

இதையடுத்து, முற்பகலில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து காங்கிரஸ் வேட்பாளா் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு பிற்பகல் 2.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பின்னா் மீண்டும் தொடங்கிய வேட்புமனு பரிசீலனையில் பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி, தவேக வேட்பாளா் மைக்கேல் குமாா், சுயேச்சை வேட்பாளா் ஜோஸ்லால் உள்ளிட்டோரின் கடும் எதிா்ப்பையும் மீறி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தூா் ராஜன், காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டதாக தெரிவித்தாா்.

இதற்கு பாஜக, தவெக, சுயேச்சை வேட்பாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதன் காரணமாக சுமாா் 4 மணி நேரம் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.