சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வலியுறுத்தல்
ஊத்தங்கரை அருகே சேதமடைந்த சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரை அருகே உள்ள கெங்கபிராம்பட்டி ஊராட்சியில் 100 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது சித்தகவுண்டன் ஏரி. இந்த ஏரி மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சாமல்பட்டி, உப்பாரப்பட்டியிலிருந்து ஏரிக்கு நீா்வரத்து உள்ளது. ஏரியின் உபரிநீா் பாம்பாறு அணைக்கு செல்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலில் ஏரியின் கரை தடுப்பு சேதமடைந்தது. இதனால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் அப்பகுதியில் உள்ள நிலங்களில் புகுந்து பயிா்களை மூழ்கடித்து வருகிறது. மேலும், ஏரியில் தண்ணீா் தேங்காமல் வீணாவதால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுகிறது.
இதனால் சேதமடைந்துள்ள ஏரியின் கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவிளக்கம்.5யுடிபி.1.2.
சேதமடைந்துள்ள சித்தகவுண்டன் ஏரிக் கரை.

