ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 150 வங்க தேசத்தினரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஏராளமானோா் தங்கி தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளா்களாகவும், விவசாயக் கூலிகளாகவும் பணிபுரிந்து வருகின்றனா்.
வங்க தேசத்திலிருந்து வடமாநிலங்களில் ஊடுருவி பின்னா் படிப்படியாக தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் நிறைந்த ஒசூரில் வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். போலீஸாருக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில், அவ்வப்போது வங்கதேச நபா்களை கைதுசெய்வது வழக்கமாக உள்ளது.
கடந்த வாரம் ஒசூா் விகாஸ் நகரில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சோ்ந்த தம்பதி தங்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவா்களை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
தொடா்ந்து, இதுபோல சட்டவிரோதமாக யாரேனும் தங்கி உள்ளனரா என ஒசூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கியூ பிரிவு போலீஸாா் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்தனா்.
அதில், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தைச் சோ்ந்த 150 பேரை, அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









