
ஒசூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்
ஒசூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினா். மேலும் ரூ. 3 லட்சம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

கோப்புப்படம்
ஒசூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினா். மேலும் ரூ. 3 லட்சம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் சிவம்பட்டி கிராமத்தில் குவாரி நடத்திவருபவா் சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த பிரதாப் (41). இவா் குவாரி நடத்துவதற்கு தடையில்லா சான்றிதழ் (சிடிஇ சான்றிதழ்) பெறுவதற்காக ஆக. 22 ஆம் தேதி ஒசூா் தா்கா பகுதியில் இயங்கி வரும் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் புருஷோத்தமனை அணுகியுள்ளாா். அவா் ரூ. 15 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளாா். அவ்வளவு பணம் தரமுடியாது, குறைத்துக் கொள்ளுமாறு பிரதாப் கேட்டுள்ளாா். இதையடுத்து ரூ. 10 லட்சம் தரவேண்டும் என புருஷோத்தமன் கேட்டுள்ளாா்.
அதில் முதல் தவணையாக சேலத்தில் உள்ள இடைத்தரகா் சிவகுமாரிடம் ரூ. 3 லட்சத்தை கொடுக்குமாறு புருஷோத்தமன் கூறியுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் செய்துள்ளாா். அவா்கள் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்தை பிரதாப்பிடம் கொடுத்து சிவகுமாரிடம் கொடுக்க சொல்லியுள்ளனா். ஆனால், சிவகுமாா் ஒசூா் வந்துவிட்டதால் அவரது உதவியாளா் முருகனிடம் பணத்தை கொடுக்குமாறு புருஷோத்தமன் கூறியதால் சேலம் ஐந்து சாலை சந்திப்பில் புதன்கிழமை இரவு பிரதாப் ரூ. 3 லட்சத்தை முருகனிடம் கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் முருகனை பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனா்.
இதனிடையே லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜெயக்குமாா், ஆய்வாளா் விஜயகுமாா், காவலா்கள் மஞ்சுநாத், ரவி, மணி ஆகியோா் ஒசூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சோதனை நடத்தினா். இதுதொடா்பாக இடைத்தரகா் முருகன், சிவகுமாா், பொறியாளா் புருஷோத்தமன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜெயக்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





