களைகட்டும் தீபாவளி வியாபாரம்: ஜவுளிக் கடைகளில் பகுதிநேர வேலையில் கல்லூரி மாணவர்கள்!

தீபாவளி பண்டிகை வியாபாரம் சூடிபிடித்துள்ளதை அடுத்து, ஜவுளி நிறுவனங்கள்
Published on

தீபாவளி பண்டிகை வியாபாரம் சூடிபிடித்துள்ளதை அடுத்து, ஜவுளி நிறுவனங்கள் பகுதிநேர வேலைக்காக கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. மாலை 6 முதல் இரவு 10 மணி வரை பணியாற்ற ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கிடைக்கப் பெறுவதால் இந்த பகுதிநேர வேலைகளில் ஈடுபட கல்லூரி மாணவர்களும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

பரவலாக தற்போது எல்லா தொழில்களிலுமே பணியாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் உதயமாகிவரும் ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு தோற்றப் பொலிவுடன் திறமையாக பேசக்கூடிய இளைஞர்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதனால், நாமக்கல், ஈரோடு, கரூர், சேலத்திலுள்ள பல முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஆண்டு முழுவதுமே மாலை 6 முதல் இரவு 9 மணி வரை பணியாற்ற கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

அதிகரித்து வரும் கல்விச் செலவினங்களால் அரசுக் கல்லூரிகளைவிட தனியார் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் ஜவுளி, நகைக் கடைகளில் பணியாற்றுகின்றனர். அவ்வாறு பகுதிநேர வேலைக்குச் செல்லும் மாணவர்களின் வசதிக்காக நாமக்கல் மாவட்டத்தில் பல தனியார் கல்லூரிகளும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வகுப்புகள் நடத்தி முடித்துக் கொள்கின்றன.

இந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை வியாபாரம் அனைத்து ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகளில் களைகட்டத் தொடங்கியுள்ளன. வழக்கமாக காலை 9.30 மணிக்கு திறக்கப்படும் அந்தக் கடைகள், தற்போது 8 மணிக்கே திறப்படுவதுடன் இரவு 11 மணி வரையிலும் வியாபாரம் மேற்கொள்கின்றன. இதனால், அந்தக் கடைகளில் தற்போதுள்ள பணியாளர்கள் போதுமானதாக இல்லாததால் பகுதிநேர வேலைக்காக கல்லூரி மாணவ, மாணவிகளைத் தேடி வருகின்றன.

இதுதொடர்பாக, உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரம் வெளியிடுவது மட்டுமன்றி தரகர்கள் மூலம் நேரடியாக கல்லூரி மாணவர்களை அழைப்பதும் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்குள் பணியாற்றினால் சுமார் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்க முடிவதுடன், ஆண்டு முழுவதும் கல்லூரிக்கு அணிந்து செல்வதற்கான ஆடைகள் சலுகை விலையில் கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள் ஜவுளி, நகைக் கடைகளில் பணியாற்ற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும், இத்தகைய பகுதிநேர வேலைகளால் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையவும், கைகளில் கிடைக்கும் அதிகப்படியான தொகைகள் அவர்களை தவறான வழியில் இட்டுச்செல்வதாக அமைகிறது என்கிறார் இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்ட செயலர் ஏ.டி.கண்ணன்.

அவர் மேலும் கூறியது:

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூலமாக மாணவர்களின் படிப்புக்கு ஏற்ற பகுதிநேர வேலைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால், இங்கு கல்விக்கு சிறிதும் தொடர்பில்லாத வேலைகளில் அதிகளவில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். பணம் கிடைப்பதற்காக மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் இத்தகைய பகுதி நேர வேலைகளை ஊக்குவிக்கக் கூடாது என்றார் அவர்.

இதுகுறித்து நாமக்கல் தனியார் கல்லூரி விரிவுரையாளர் பிரணவ்குமார் கூறியது:

எங்கள் கல்லூரியில் படிக்கும் சுமார் 1500 மாணவர்களில் 800 மாணவர்கள் வரை பகுதிநேர வேலைகளில் ஈடுபடுகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி சார்ந்த பகுதிநேர வேலை கிடைப்பதில்லை.

மேலும், அவர்கள் செய்யும் பணிகளால் அவர்கள் வழிதவறக் கூடும் என்று கூறுவது தவறு. குடும்ப வறுமை காரணமாகவே பகுதிநேர வேலைக்குச் செல்லும் அத்தகைய மாணவர்களே படிப்பு மற்றும் ஒழுக்க விஷயங்களிலும் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டுள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com