/

தகாத உறவு: பெண்ணைக் கொன்று ஓட்டுநர் தற்கொலை 

திருச்செங்கோட்டில் வீட்டு வேலை செய்து வந்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற வாகன ஓட்டுநர், பின்னர் அரிவாளால் தன்னைத்தானே வெட்டி தற்கொலை செய்து கொண்டார். 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:39 am IST

திருச்செங்கோட்டில் வீட்டு வேலை செய்து வந்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற வாகன ஓட்டுநர், பின்னர் அரிவாளால் தன்னைத்தானே வெட்டி தற்கொலை செய்து கொண்டார்.
 திருச்செங்கோடு சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (50). இவரது கணவர் ராமசாமி இறந்து விட்ட நிலையில், லட்சுமி வீட்டு வேலை செய்து வாழ்ந்து வந்தார்.
 இதுபோல ராஜாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் செல்வம் (55) என்பவர் தனது குடும்பத்தாரிடமிருந்து விலகி வசித்து வந்தார்.
 இருவருக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அந்தப் பகுதி டீசிஎஸ் காலனிக்கு வழக்கம்போல வீட்டு வேலைக்கு லட்சுமி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த செல்வம், லட்சுமியை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை அவரது தலையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றார். சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த லட்சுமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லட்சுமி இறந்தார். இதற்கிடையே லட்சுமியைத் தாக்கி விட்டுத் தப்பிச்சென்ற செல்வம், அந்தப் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளிக்கு எதிரே இளநீர் விற்கும் கடைக்குச் சென்றார். பின்னர் அந்தக் கடையில் இருந்த அரிவாளால் தன்னைத்தானே வெட்டிக் கொண்டார். தனது கை,கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டிக் கொண்ட செல்வம் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து சிறிது நேரத்தில் இறந்தார். தகவல் அறிந்த திருச்செங்கோடு நகரக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.