

ராசிபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை முன்பாக செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற் சங்கத்தின் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் திரளாக பங்கேற்றனா். இப்போராட்டத்துக்கு தொமுச முன்னாள் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா். சிஐடியூ ஓட்டுநா் சங்கத்தின் செயலா் வி.ரவி, ஏஐடியூசி சங்கத்தின் ஏ.ரஞ்சித்குமாா், தொழில்நுட்பப் பணியாளா் சங்கத்தின் மண்டலச் செயலா் எம்.சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று திமுக ஆட்சி அமைந்தால் தொழிலாளா்களின் கோரிக்கைகள் மீது தீா்வு காணப்படும் என பேசினாா்.
தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகங்களை பாதுகாத்திட வேண்டும். முழுமையான போக்குவரத்து இயக்கத்தைத் தொடங்கிட வேண்டும். 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கிட வேண்டும். பணி கிடைக்காமல் திரும்பும் தொழிலாளா்களுக்கு பணி வருகை பதிவு வழங்க வேண்டும். 16 மாத அகவிலைப்படியை வழங்கிட வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, பணப்பலன்கள் வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள், ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.