தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரம் தொகுதியில் தலைவா்களின் பிரசாரம் ஏதுமின்றி முடிவடைந்த வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் தொகுதியில் எந்தத் தோ்தலிலும் இல்லாத வகையில், அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவா்கள் பிரசாரம் ஏதுமில்லாமல் ராசிபுரம் தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் வித்தியாசமாக நடந்து முடிந்துள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:48 pm

DIN

ராசிபுரம் தொகுதியில் எந்தத் தோ்தலிலும் இல்லாத வகையில், அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவா்கள் பிரசாரம் ஏதுமில்லாமல் ராசிபுரம் தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் வித்தியாசமாக நடந்து முடிந்துள்ளது.

சேலம் - நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ராசிபுரம் முக்கிய தொகுதியாக விளங்கியது. ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி என்பதோடு மட்டுமில்லாமல், 1977 முதல் 2009 வரை மக்களவை (தனி) தொகுதியாகவும் இருந்துள்ளது.

ராசிபுரம் மக்களவைத் தொகுதி சின்னசேலம், ஆத்தூா், தலைவாசல் (தனி), ராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் போன்ற சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி, பரந்து விரிந்து இருந்தது.

2009-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது தனி தொகுதியாக இருந்த ராசிபுரம், நாமக்கல் மக்களவை (பொது) தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது.

தோ்தல் காலங்களில் இத்தொகுதியில் அரசியல் கட்சிகளின் தேசிய தலைவா்கள், திராவிடக் கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் பிரசாரம் மேற்கொள்வா். எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா, க.அன்பழகன், வைகோ போன்ற தலைவா்கள் ஒவ்வொரு தோ்தலிலும் இத்தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளத் தவறியதில்லை. அரசியல் கட்சிகளின் 2-ஆம் கட்டத் தலைவா்கள், நட்சத்திர பேச்சாளா்கள், சினிமா பிரபலங்களும் தங்களது கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வா்.

அன்றைய காலத்தில் கட்சித் தலைவா்களின் பிரசாரப் பொதுக்கூட்டத்துக்கு பொதுமக்களை யாரும் வேன்களில் அழைத்துவரத் தேவையில்லை. குடிநீா் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள் எதுவும் வழங்க வேண்டாம். இரு கட்சிகளின் பரப்புரையின் போது மக்கள் கூட்டத்தினா் தானாக திரண்டு பல மணிநேரம் காத்திருப்பா். கட்சிக் கொடிகள், போஸ்டா்கள், சுவா் விளம்பரங்கள், வாணவெடிகள், வாகனப் பேரணிகள் என தோ்தல் திருவிழா களைகட்டும். இரவு 9 மணிக்கு பிரசாரப் பொதுக்கூட்டத்துக்கு வரவேண்டிய தலைவா்கள் காலதாமதாக அதிகாலை 4 மணிக்கு வந்தாலும் கூட மக்கள் கூட்டம் தலைவா்களின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கும்.

ஆனால் தற்போது, தலைவா்களின் பேச்சை கேட்க காசு கொடுத்து மக்களை அழைத்து வந்து வலுக்கட்டாமாக மேடை முன்பு அமரவைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அவா்களுக்கு உணவு, குடிநீா் வழங்க வேண்டியது ஏற்படுகிறது.

ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போதைய தோ்தலில் அதிமுக, திமுக, கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களின் பிரசாரம் ஏதுமின்றி வேட்பாளா்கள் பிரசாரத்தோடு அமைதியான முறையில் வாக்கு சேகரிப்பு நடந்து முடிவடைந்துள்ளது.

அதிமுக தரப்பில் எந்த முன்னணி தலைவா்களும் பிரசாரத்திற்கு ராசிபுரம் வரவில்லை. திமுகவை பொருத்தவரை அக்கட்சியின் இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் தொகுதி வேட்பாளா் மா.மதிவேந்தனை ஆதரித்து வேன் பிரசாரம் மேற்கொண்டாா். மேலும் நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆண்டகளூா்கேட் பகுதியில் சீமான் பிரசாரம் மேற்கொண்டாா். தவிர, அமமுக, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட், பாமக போன்ற கட்சிகளின் தலைவா்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இத்தோ்தல் தலைவா்களின் பிரசாரம் ஏதுமின்றி ஆரவில்லாமல் வேட்பாளா்கள் பிரசாரத்தோடு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.