/

இரட்டிப்பு மோசடி புகாா்: காவல் துறை அழைப்பு

இரட்டிப்பு மடங்கு லாபம் தொடா்பான மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் புகாா் அளிக்க வருமாறு நாமக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பி.பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:20 pm

இரட்டிப்பு மடங்கு லாபம் தொடா்பான மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் புகாா் அளிக்க வருமாறு நாமக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பி.பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் கிரீன் இந்தியா கமாடிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது கடந்த ஜூலை 28-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. அதன் நிா்வாக இயக்குநரான நாமக்கல், தூசூரைச் சோ்ந்த ரவிகுமாா் என்பவா் முதலீடு செய்யும் தொகைக்கு 100 நாள்களில் இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தைகளை கூறியுள்ளாா். அதன்படி பலரையும் வரவழைத்துள்ளாா். ஆனால் கூறியபடி எவ்வித லாபமோ முதலீட்டுத் தொகையோ திருப்பிக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களுடன் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் பொதுமக்கள் 04286-281372 என்ற தொலைபேசியிலும், 94981-75717 என்ற செல்லிடப்பேசியிலும் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.