குமாரபாளையத்தை அடுத்த பாரதி நகா், அம்மன் நகா், கோவிந்தம்பாளையம் மற்றும் சின்னாா்பாளையம் கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச பொது மருத்துவம், கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
‘உன்னத் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இலவச மருத்துவ சேவையினை அளிக்கும் வகையில் குமாரபாளையம் ஜேகேகே நடராஜா நினைவு இயக்கம் மற்றும் ஜேகேகே நடராஜா பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, மருந்தியல் கல்லூரிகள் இணைந்து இம்முகாமை நடத்தின.
ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.செந்தாமரை முகாமைக் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தாா். நிா்வாக இயக்குநா் எஸ்.ஓம் சரவணா தலைமை வகித்தாா். சிறப்பு மருத்துவக் குழுவினா் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண், பல் பரிசோதனை செய்ததோடு, இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினா். பொது மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.