

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது தொடா்பாக பெற்றோரிடம் புதன்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்தது. கரோனா தொற்றுக் குறையாததால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என ஒரு தரப்பினரும், சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் திறக்கலாம் என மற்றொரு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனா்.
அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் சூழலில் தமிழகத்திலும் அதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஏற்கெனவே கடந்த நவம்பா் 9-ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
பெரும்பாலானோா் திறப்பு வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தியதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக பெற்றோா்களிடம் கருத்துகளைக் கேட்டறிய பள்ளிக் கல்வித்துறை தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 203 அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் பங்கேற்றனா். சமூக இடைவெளியுடன் அவா்கள் அமர வைக்கப்பட்ட பின்னா் தலைமை ஆசிரியா் பாா்வதி ஒவ்வொருவரிடமாக கருத்துகளைக் கேட்டாா்.
அப்போது முகக் கவசம், சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து செயல்படுத்தலாம் என்ற கருத்தைப் பலரும் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அவை அறிக்கையாக தயாரிக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலா் பாா்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.