நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயா பி.சிங் பொறுப்பேற்றார். மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார். இரு மாதங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரள மாநிலத்திற்கு சென்று வந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவரும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க- மு.க. ஸ்டாலின் வெளியிட்ட மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி
இந்த நிலையில் அண்மையில் மீண்டும் கேரளம் சென்று வந்த நிலையில் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுடனான பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்கவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி ஆட்சியர் பொறுப்பை கவனித்து வருகிறார். கரோனா பாதிப்பு குறித்து ஆட்சியரை தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் ஆட்சியர் மருத்துவமனையில் உள்ளார் என்ற தகவலை தெரிவித்தார்.