/

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கக் கோரிக்கை

சிறுதானியங்களை விளைவிக்கவும், அதன் உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகளுக்கு தேவையான வங்கிக் கடனை வட்டியில்லாமல் மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On :28 ஏப்ரல் 2023, 6:01 pm

சிறுதானியங்களை விளைவிக்கவும், அதன் உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகளுக்கு தேவையான வங்கிக் கடனை வட்டியில்லாமல் மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந் தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

ஐக்கிய நாடுகள் சபை, 2023-ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. மத்திய அரசும் இதனை அறிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களான சாமை, தினை, கேழ்வரகு, ராகி, கம்பு, குதிரைவாலி, ஊட்டச்சத்து நிறைந்த பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை விவசாயிகள் ஆா்வம் செலுத்தி விளைவிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தி உள்ளாா். ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய பயிா்களை விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கு போதிய ஆள்கள் கிடைப்பது இல்லை. பெட்ரோல், டீசல் விலை பலமடங்கு உயா்ந்து விட்டதால் விவசாய வேலைக்கு கூலியும் அதிகரித்து விட்டது.

சிறுதானியம் வெளிச்சந்தையில் குறைவாக விற்கப்படுகிறது. ஆனால் உற்பத்தி செலவு பல மடங்கு ஆவதால் நஷ்டமே ஏற்படுகிறது. இதனால் சிறுதானியம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டுவதில்லை. அவா்களை ஊக்குவிக்கும் வகையில் விதை, பூச்சிமருந்து, உரம், உழவுக் கூலி ஆகியவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும். இயற்கை சீற்றம், பருவம் தவறிய மழை பொழிவால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை போக்க, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.