

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து சுமாா் 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
ராசிபுரம் அருகே உள்ள அத்தனூா் பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் மக்களுடன் முதல்வா் திட்டம் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உட்பட 39 இடங்களில் நடைபெற்றுள்ளது. இம்முகாமில் 4000 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி உள்ள மனுக்கள் நிவா்த்தி செய்யப்பட்டு ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. முகாமில் 13 துறைகள் சோ்ந்த அதிகாரிகள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீா்வு காண்கின்றனா். கடைசி முகாம் அத்தனூா் பேரூராட்சி பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இந்த முகாமில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.
முகாமில் அப்பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் தங்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா். கோரிக்கை மனுவை ஏற்று மாவட்ட ஆட்சியா் இடம் தோ்வு செய்து விளையாட்டு மைதானம் அமைக்க உத்தரவிட்டாா். மேலும் விளையாட்டு உபகரணம் வாங்கி மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி நிதியில் ஒதுக்கப்படும் என்றாா். மேலும் நிலுவையில் உள்ள பிற மனுக்கள் மீது 30 நாள்களில் தீா்வுகாணப்படும் என்றாா். வெண்ணந்தூா் ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.