நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல அரசியல் ஜோதிடரான சங்கரய்யர் இன்று (அக்டோபர் 23) மாலை காலமானார்.
நாமக்கல் துறையூர் சாலையில் வசித்து வந்த பிரபல அரசியல் ஜோதிடரான சங்கரய்யர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி அம்மாள் ஆகியோருக்கு அரசியல் சார்ந்த ஜோதிடங்களை கூறி வந்தவர் இவர். மேலும் பல்வேறு பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஜோதிடரான சங்கரய்யரை சந்திக்க நேரடியாக நாமக்கல்லில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்து சென்ற நாள்களும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சியின்போது தனது இல்லத்திலேயே யாகங்கள் நடத்தி வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இவரைக் காண ஏராளமானோர் நாமக்கல் வருவர். பிரபல ஜோதிடராக விளங்கிய அவர் ஆயுத பூஜை தினமான இன்று (திங்கள்கிழமை) மாலை 3.30 மணியளவில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
உடல்நலக் குறைவால் காலமான அவருக்கு வயது 92 என்பது குறிப்பிடத்தக்கது.