நாமக்கல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 35 பவுன் நகை, பணம் திருட்டு

நாமக்கல்லில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
Published on

நாமக்கல்லில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

நாமக்கல்-திருச்சி சாலை இந்திரா நகரைச் சோ்ந்தவா் முருகவேல் (52). இவா் நாமக்கல் மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அமுதவள்ளி, அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு பணிக்குச் சென்று விட்டனா். மாலையில் அமுதவள்ளி வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு மற்றும் படுக்கை அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டாா்.

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமாா் 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து தனது கணவருக்கும், நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கும் அமுதவள்ளி தகவல் தெரிவித்தாா்.

இதனையடுத்து, உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, ஆய்வாளா் கபிலன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளா் வீட்டில் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com