100 நாள் வேலைத் திட்டத்தில் திருத்தம்: டிச. 24-இல் திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலையளிப்பு உறுதி திட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய தலைநகரங்களில் புதன்கிழமை (டிச. 24) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலருமான கே.ஆா். என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வந்தது.
தற்போது, இத்திட்டத்தில் மத்திய பாஜக அரசு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 100 நாள் திட்டத்தை, 125 நாள்களாக உயா்த்துவதாகக் கூறினாலும், புதிய மசோதாவில் அறுவடைக் காலம், விதைப்பு காலம் என்று கணக்கிட்டு அந்த நாள்களில் வேலையில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிராமப்புற ஏழை கூலி விவசாயத் தொழிலாளா்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது.
விதைப்பு மற்றும் அறுவடை காலத்தை கணக்கிட்டு ஆண்டுக்கு 60 நாள்கள் வேலையில்லை என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் படிப்படியாக வேலைநாள்களை குறைத்துள்ளனா். இத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த மகாத்மா காந்தியின் பெயரையும் நீக்கி உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு 40 லட்சம் மனித வேலை நாள்களாக இருந்தது, தற்போது 20 லட்சம் மனித வேலை நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை பாஜக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து உரிய காலத்தில் வழங்கவில்லை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி சுமாா் ரூ.1900 கோடி நிலுவையில் இருக்கிறது.
மத்திய அரசின் புதிய வேலையளிப்பு திட்ட மசோதாவில் நிதி 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத நிதிச் சுமை மாநில அரசின் மீது ஏற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக புதிய மசோதாவை ரத்துசெய்வதுடன், மகாத்மா காந்தி ஊரக வேலையளிப்பு உறுதித் திட்டத்தை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாதிரியே செயல்படுத்தவேண்டும்.
இதை வலியுறுத்தி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய தலைநகரங்களில் புதன்கிழமை (டிச.24) காலை 10 மணியளவில், அனைத்து வேலையளிப்புத் திட்ட தொழிலாளா்களை திரட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக திங்கள்கிழமை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.
இந்த பேட்டியின்போது, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.

