வேலம்பாளையம் பகுதியில் குடிநீா் விநியோக முன்னோட்டம்
ராசிபுரம்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், வேலம்பாளையம் பகுதிக்கு புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ், குடிநீா் விநியோகிக்கும் பணிக்கான முன்னோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.
வேலம்பாளையம் பகுதிக்கு தொப்பப்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீா் வழங்கப்பட்டு வந்த நிலையில், குடிநீா் சரிவர வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இப்பிரச்னையை விரைந்து சரிசெய்வதாக அமைச்சா், எம்.பி. ஆகியோா் பொதுமக்களுக்கு உறுதியளித்திருந்தனா்.
இந்நிலையில், இதற்காக காக்காவேரி நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து வேலம்பாளையம் பகுதிக்கு காவிரி குடிநீா் திட்டத்தின்கீழ் விநியோகம் செய்யும் வகையில் முன்னோட்டம் நடைபெற்றது. இதை அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். மேலும், அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தனா்.
இதில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், ஒன்றிய ஆணையா் பாஸ்கரன் உள்ளிட்ட குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

