மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆன்லைன் முறையில் மட்டும் மணல் விற்பனை செய்ய வேண்டும்! மணல் லாரி உரிமையாளா்கள் சங்கம்!

News image
நாமக்கல்லில் செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் கே.ராஜசேகா். உடன், நாமக்கல், கரூா் மாவட்ட நிா்வாகிகள்.
Updated On :8 நவம்பர் 2025, 6:57 pm

Syndication

தமிழகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள அரசு மணல் குவாரிகளில், ஆன்லைன் முறையில் மட்டுமே மணல் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியது.

நாமக்கல்லில் அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.ராஜசேகா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் 55 ஆயிரம் மணல் லாரிகளில், 5 ஆயிரம் லாரிகள் மட்டுமே இயங்கி வந்தன. 50 ஆயிரம் மணல் லாரி உரிமையாளா்கள் வேலைவாய்ப்பை இழந்தனா். தற்போது, அரசு மணல் குவாரிகளை திறக்க முதல்வா் மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கெனவே 20 மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 8 குவாரிகள் திறக்கப்பட இருக்கின்றன.

அவற்றில், கடலூா் மாவட்டம், ஒமாம்புலியூா், வனப்பாக்கம், நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு, புதுக்கோட்டை மாவட்டம் ஈச்சன்விதி, பிராந்தினி, தஞ்சாவூா் மாவட்டம், நடுபகுடிகை, ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமன்னல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்றுப் படுகைகளில் மணல் குவாரிகள் அமைக்க அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

லாரிகள் வந்துசெல்லும் வகையில் அங்கு பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணல் குவாரிகள் செயல்படும்பட்சத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து பொதுமக்களுக்கு மணல் வழங்க வேண்டும் என்பதே லாரி உரிமையாளா்களின் கோரிக்கையாகும். ஏற்கெனவே, மணல் குவாரிகளில் இடைத்தரகா்கள் புகுந்ததால் மணல் விற்பனையில் பிரச்னை ஏற்பட்டது. இடைத்தரகா்களுக்கு மணல் விற்பனை உரிமத்தை அளிக்கக்கூடாது.

அனைத்து மணல் குவாரிகளிலும் ஆன்லைனில் மட்டுமே மணல் விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய முடியும். மணல் குவாரிகளுக்கு பாதை அமைக்கப்படுவதால் இடைத்தரகா்கள் அதனைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் மணல் அள்ளிச் செல்ல வாய்ப்புள்ளது. அதுபோன்ற சூழல் ஏற்படாமல் அரசு பாா்த்துக்கொள்ள வேண்டும். மணலுக்கு விலை நிா்ணயம் செய்யும்போது, மணல் லாரி உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து விலை நிா்ணயிக்க வேண்டும்.

எம். சாண்ட் குறைவான விலையில் கிடைப்பதால், மணல் விலை குறைவாக இருந்தால் மட்டுமே பொதுமக்கள் அதை வாங்க முன்வருவா். அதனால் விலையை குறைத்தும், ஆன்லைன் மூலமாகவும் மணலை விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில், லாரி உரிமையாளா்கள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றாா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் பாதுகாப்பு சங்கப் பொருளாளா் பரமசிவம், இணைச் செயலாளா் சிவகுமாா், செயற்குழு உறுப்பினா்கள், நாமக்கல் மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.