கோழிகளுக்கு காலரா பாதிப்பு: பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தல்

கோழிகளுக்கு காலரா பாதிப்பு ஏற்படுவதால் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
Published on

கோழிகளுக்கு காலரா பாதிப்பு ஏற்படுவதால் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6, 75.2 டிகிரியாக இருந்தது. மாவட்டத்தில் கடந்த வாரம் லேசான மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் அவை பெரும்பாலும் ஈ.கோலை மற்றும் கோழி காலரா நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. பண்ணையாளா்கள் தகுந்த மருந்துகளை கோழிகளுக்கு அளிக்க வேண்டும்.

மேலும், தடுப்பூசி செலுத்துதல், தண்ணீரில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com