துரித உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கிச் சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டணம் பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ். இவரது மனைவி அஞ்சம்மாள். இவா்களுக்கு மகள்கள் விஜயலட்சுமி (10), வினிதா (4), மகன் விஜய் (5) உள்ளனா். இவா்கள் பரமத்திவேலூா் வட்டம், நெடாடையாம்பாளையத்தில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் குடும்பத்துடன் தங்கி வேலை பாா்த்து வந்தனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு ராமதாஸ் பாண்டமங்கலத்தில் உள்ள துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளாா்.
இதில் சிக்கன் ரைஸை சாப்பிட்ட விஜயலட்சுமிக்கு சிறிது நேரத்தில் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு விஜயலட்சுமியை பரிசோதித்த மருத்துவா், இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுமி விஜயலட்சுமி துரித உணவை சாப்பிட்டதால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக இறந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
