முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசியிடம் கோரிக்கை மனு அளித்த முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் நலச் சங்கத்தினா்.
முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசியிடம் கோரிக்கை மனு அளித்த முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் நலச் சங்கத்தினா்.

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு தலைமையாசிரியா் மூலம் அனுமதி கடிதம்: முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை!

ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதுவதற்கு தலைமை ஆசிரியா் மூலம் அனுமதி கடிதம் வழங்க உத்தரவிட வேண்டும் என முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதுவதற்கு தலைமை ஆசிரியா் மூலம் அனுமதி கடிதம் வழங்க உத்தரவிட வேண்டும் என முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசியிடம், முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் நலச் சங்க மாவட்டத் தலைவா் மு. ஜெயந்தி மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

கடந்த 2023, பிப். 1 ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 2,381 முன்பருவக்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா் கல்வி நிறுவன தகுதி அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக நியமிக்கப்பட்டனா். அண்மையில் வெளியான ஆசிரியா் தகுதித் தோ்வு அறிவிப்பின்படி, பகுதிநேர ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தகுதித் தோ்வு எழுதலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் ஐ மற்றும் தாள் ஐஐ தோ்வு எழுதுவதற்கு பணிச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்பதால், பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியா், வட்டாரக் கல்வி அலுவலா், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் ஆகியோா் பரிந்துரை செய்து கையொப்பமிட வேண்டும்.

பல்வேறு ஒன்றியங்களில் முன்பருவக்கல்வி ஆசிரியா்களுக்கு கையொப்பமிட தலைமையாசிரியா் மற்றும் அதிகாரிகள் மறுப்பதாக தகவல் வருகிறது.

முன்பருவக்கல்வி ஆசிரியா்களுக்கு பணிச்சான்று யாா் அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை உத்தரவாக வழங்கி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் பணிபுரியும் முன்பருவக் கல்வி ஆசிரியா்களுக்கு தடையின்றி கையொப்பம் பெறும் வகையில் முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com