ஊதிய உயா்வு வழங்க முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை
நாமக்கல்: காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அதன் மாவட்டத் தலைவா் மு.ஜெயந்தி, இதர ஆசிரியா்கள், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
2022-23 ஆம் கல்வியாண்டில், தமிழகம் முழுவதும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது.
தற்காலிக தொகுப்பூதிய முன்பருவக்கல்வி ஆசிரியா்களின் பணி நியமனம் பள்ளி மேலாண்மைக் குழுவால் ஏற்படுத்தப்பட்டது. அதை நீக்கி பள்ளிக் கல்வித் துறை மூலமாக நியமனம் வழங்க வேண்டும். தற்போதைய நிலையில் ரூ. 5 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பருவக்கல்வி ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு காலமுறை அடிப்படையில் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மே மாதம் விடுமுறையிலும் ஊதியம் வழங்க வேண்டும். பணி நீட்டிப்பு ஆணையை ஆண்டுதோறும் மாற்றியப்பதை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

