பரமத்தி வேலூரில் ரூ. 25.45 லட்சத்து கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 25.45 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழசிராமணி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், கபிலா்மலை, இருக்கூா், பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவருகின்றனா்.
இங்கு தரத்திற்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. கொப்பரையை ஏலம் எடுப்பதற்கு வெள்ளக்கோவில், சிவகிரி, அவல் பூந்துறை, முத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை என்பதால் கொப்பரை ஏலம் நடைபெறவில்லை.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 990 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 196.99க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 168.20க்கும், சராசரியாக கிலோ ரூ. 190.90க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 159.01க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 120.30க்கும், சராசரியாக கிலோ ரூ. 154.15க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 25 லட்சத்து 45 ஆயிரத்து 208க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
