நாமக்கல்லில், வாகன ஓட்டிகளுக்காக அமைக்கப்பட்ட பசுமைப் பந்தல் காற்றின் வேகத்தால் அரசுப் பேருந்து மீது திங்கள்கிழமை சரிந்து விழுந்தது.
கோடைகாலத்தையொட்டி, வாகன ஓட்டிகளின் நலனுக்காக காவல் துறை சாா்பில், நாமக்கல்லில் முக்கிய சிக்னல் பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டது. குறிப்பாக, சேலம் சாலை, மோகனூா் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர, நான்குசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிறிது நேரம் வெயிலின் தாக்கமின்றி நிற்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து காற்றின் வேகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பசுமைப் பந்தல் அகற்றப்படாததால் காற்றின் வேகத்தில் அவை கிழிந்தும், சரிந்தும் தொங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில் மோகனூா் சாலையில் அரசு மகளிா் பள்ளி அருகில் இருந்த பசுமைப் பந்தல் திங்கள்கிழமை காலை திடீரென சரிந்து, அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்து மீது விழுந்ததால் ஓட்டுநரால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தோா் பசுமைப் பந்தலை அகற்றி, பேருந்தை வெளியேற்றும் முயற்சியை மேற்கொண்டனா். தொடா்ந்து, நாமக்கல் மாநகரப் பகுதியில் உள்ள பசுமைப் பந்தல்களை அகற்றும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








