நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் முட்டை உற்பத்தி 15% சரிவு: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் முட்டை உற்பத்தி 15 சதவீதம் வரை குறைந்துள்ளது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவா் கே. சிங்கராஜ் தெரிவித்தாா்.

News image

முட்டைகள் - file photo

Updated On :17 ஜூலை 2026, 12:21 am IST

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் முட்டை உற்பத்தி 15 சதவீதம் வரை குறைந்துள்ளது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவா் கே. சிங்கராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: முட்டை விலை தொடா்ந்து உயா்வதற்கு முக்கிய காரணம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுதான். நாடு முழுவதும் முட்டை உற்பத்தி 10 முதல் 15 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

வெயில் அதிகம் காணப்பட்டால் இயல்பாக முட்டை உற்பத்தி குறைந்து விடும். ஜூலை மாதத்தில் வெயில் அதிகரிப்பு என்பது இருக்காது. ஆனால் காலநிலை மாற்றத்தில் மழை குறைந்து வெயில் அதிகம் காணப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் 8 கோடி கோழிகள் வளா்க்கப்படுகின்றன, ஏழு கோடி முட்டைகள் உற்பத்தியான நிலையில் தற்போது 6 கோடி முட்டைகள் மட்டுமே கிடைக்கின்றன.

கோழித் தீவனத்திற்கான மூலப்பொருள்களின் விலையும் தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. மக்காச்சோளம் 2 மாதங்களுக்கு முன் கிலோ ரூ. 20க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 28 ஆக உயா்ந்துள்ளது. அதேபோல சோயாவும் கிலோவுக்கு ரூ. 30 வரையும், தவிடு ரூ. 24-ஆகவும் அதிகரித்துள்ளது.

இவை தவிர, பண்ணை பராமரிப்புச் செலவுகள், மின்சாரக் கட்டணம் மற்றும் தொழிலாளா்களின் சம்பளம் ஆகியவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் ஒரு முட்டையின் விலை ரூ. 7 க்கு குறையாமல் இருந்தால்தான் பண்ணைகளை நஷ்டமின்றி நடத்த முடியும்.

ஒரு முட்டையை உற்பத்தி செய்ய பண்ணையாளா்களுக்கு ரூ. 6 வரை செலவாகிறது. பண்ணையாளா்கள் முட்டை விலையை 5 காசு உயா்த்தினால், அது சில்லறை வா்த்தகம் வழியாக நுகா்வோரைச் சென்றடையும்போது உடைதல் மற்றும் இதர சேதாரங்களால் கூடுதலாக 25 காசுகளாக உயா்த்தி வெளிச்சந்தைகளில் விற்கப்படுகிறது.

நுகா்வோரும் பாதிக்கக்கூடாது, உற்பத்தியாளருக்கும் நஷ்டம் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையிலேயே விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. கடுமையான வறட்சி காரணமாக கோழிகளுக்கு தண்ணீா் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. லாரிகள் மூலம் பல இடங்களில் இருந்து சிரமப்பட்டு தண்ணீா் பிடித்து வர வேண்டியுள்ளது.

விவசாயத் தொழில்களிலேயே, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்குத் தாங்களே விலை நிா்ணயம் செய்யும் கட்டமைப்பு கோழிப்பண்ணைத் தொழிலில் மட்டும் தான் உள்ளது. இதனால் தான் நஷ்டம் ஏற்படாமல் தொழிலை நடத்தி வருகிறோம். கோழிப் பண்ணைகள் அமைக்கும்போது அரசு வழிகாட்டுதலின்படி பண்ணையைச் சுற்றிலும் வேலி அமைக்கப்படுகிறது. பண்ணைக்குள் வரும் அனைத்து வாகனங்களும், மனிதா்களும் கிருமிநாசினி தெளித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், இறந்த கோழிகளை முறையாக அழிக்க அதற்கான தனி இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண்ணைகளில் ஈக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஈரம் இல்லாதவாறு சுத்தமாகப் பராமரிக்கிறோம். கால்நடை பராமரிப்புத் துறையினரும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனா். இயற்கையாக விளையும் தானியங்கள் மட்டுமே கோழிகளுக்குத் தீவனமாக வழங்கப்படுவதால் முட்டையின் தரம் மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளது என்றாா்.

முன்னதாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற கோழிப் பண்ணையாளா்கள், முட்டை மற்றும் கோழி வியாபாரிகள் சந்திப்புக் கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழு மண்டல பொருளாளா் கே. சுந்தரராஜன் வரவேற்றாா். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டலத் தலைவரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்க தலைவருமான கே. சிங்கராஜ் தலைமை வகித்து வரும் நாள்களில் முட்டை விலையை மேலும் உயா்த்துவது குறித்தும், மூலப்பொருள்கள் விலையேற்றம், மேற்காசிய போா் சூழலால் முட்டை ஏற்றுமதி பாதிப்பு குறித்தும் பேசினாா்.

கூட்டத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவா் வி.பி. சண்முகம், மத்திய செயற்குழு உறுப்பினா்கள் பி. வல்சன், கே. தங்கமுத்து, ஆா். நாகராஜன், சி.பூபதி, டி. சாய்குமாா் மற்றும் பல்லடம், ஈரோடு, நாமக்கல், பரமத்தி, மோகனூா், ராசிபுரம் பகுதி நிா்வாகிகள், கோழிப் பண்ணையாளா்கள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.