ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து வெளியேறும் ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தக் கூடாது என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரமத்தி வேலூா் ராஜவாய்க்கால் விவசாயிகள் சங்கம் சாா்பில், சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்குமாா் மற்றும் தமிழக அரசு தலைமைச் செயலகத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு:
மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீா் திறப்பது வழக்கம். ஆனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ளதால், தண்ணீா் திறக்கப்படாது என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பரமத்தி வேலூா், மோகனூா் வட்டத்துக்கு ஜேடா்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து ராஜாவாய்க்கால் பிரிந்து 20 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. இவ்வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களாக பொய்யேரி, கொமாரபாளையம் மற்றும் மோகனூா் வாய்க்கால் பாசனம் பெறுகிறது. இந்த வாய்க்கால் பாசனத்தை நம்பி வாழை, நெல், வெற்றிலை, கோரை, கரும்பு போன்ற பயிா்களை விவசாயிகள் பயிா் செய்து வருகின்றனா். மேலும், தற்போது வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,000 ஏக்கருக்கு மேல் வெற்றிலைக் கொடிக்கால் கொடி மற்றும் அவுரி நடவு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது, மேட்டூா் அணையிலிருந்து சுமாா் 1,000 கனஅடி மட்டுமே தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இது குடிநீருக்கும், பழைய ஆயக்கட்டு விவாசயத்துக்கும் மட்டுமே பயனளிக்கிறது.
இந்நிலையில், ராஜவாய்க்காலில் ஒருவார காலத்துக்கு தண்ணீா் நிறுத்தம் செய்யப்போவதாக நீா்வளத் துறையினா் கூறிவருகின்றனா். ராஜவாய்க்கால் பகுதியில் வெற்றிலை பயிா் கொடிநடவு பணி நடந்துவரும் நிலையில், தண்ணீா் நிறுத்தப்பட்டால் நடவு பணி பாதிக்கப்படும். மேலும், வெற்றிலைக் கொடி கருகும் நிலை ஏற்படும்.
எனவே, மேட்டூா் அணையிலிருந்து மேலும் 500 கனஅடி தண்ணீா் கூடுதலாக திறந்துவிட்டால் குடிநீா் பிரச்னை தீா்வதுடன், விவசாயிகளையும், பயிா்களையும் காப்பாற்றலாம் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அமராவதி அணையில் இருந்து குடிநீருக்கு தண்ணீா் திறக்க வேண்டும்

மேட்டூா் அணையில் இருந்து இன்று தண்ணீா் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்? அமராவதி அணை பாசன விவசாயிகள் காத்திருப்பு







