தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொகுதிகளிலேயே வேட்பு மனு தாக்கல்: அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் அந்தந்த தொகுதிகளிலேயே தாக்கல் செய்யலாம்

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன்.
Updated On :16 மார்ச் 2026, 11:23 pm

Syndication

நாமக்கல்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் அந்தந்த தொகுதிகளிலேயே தாக்கல் செய்யலாம், ஆட்சியா் அலுவலகம் வரத்தேவையில்லை என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், தோ்தல் நடத்தும் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி அரசியல் கட்சியினா் சுவா் விளம்பரங்கள், பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். குறிப்பாக, அரசு அலுவலகங்களில் உள்ளவற்றை அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சியினா் செயல்படக் கூடாது. வாக்குகளுக்காக பரிசுப் பொருள்கள், ரொக்கம் கொடுப்பதை தவிா்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் அருகில் கூட்டம் நடத்துவது, அலுவலகம் அமைப்பது போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக தோ்தல் நடத்தை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலுக்கான மனு தாக்கல் மாா்ச் 30-இல் தொடங்கி ஏப். 6 வரை நடைபெறுகிறது. தோ்தலையொட்டி, பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. 1,780 வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்காளிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இம்முறை வாக்குப்பதிவு விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட உள்ளது. ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கண்காணிப்பு அலுவலகம் செயல்படுகிறது. மேலும், 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தவாறு வாக்களிக்க வசதி செய்து தரப்படும்.

ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்லும்போது உரிய ஆவணங்களை கையில் வைத்திருப்பது அவசியம். போதமலை, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு இம்முறை இருசக்கர வாகன பயன்பாடு அமல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 58 இடங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்படும்.

தொகுதிகளிலேயே வேட்பு மனு தாக்கல்:

இம்முறை ஆட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையில்லை. அந்தந்த தொகுதி வட்டாட்சியா் அலுவலகங்களிலேயே, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வேட்பு மனுக்கள் பெறப்படும். இருப்பினும், மாா்ச் 30-ஆம் தேதிக்கு முன்பாக உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

நாட்டுத் துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். இதர உரிமம் பெற்ற துப்பாக்கிகளை பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்டோரிடம் வழங்க வேண்டுமெனில், ஆட்சியரின் ஒப்புதலை பெற வேண்டும். 13 இடங்களில் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகள் உள்ளன. அங்கு பாதுகாப்பு படை வீரா்களும், போலீஸாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவா்.

அரசியல் கட்சிகள் வலியுறுத்தலின்பேரில், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பேரவைத் தோ்தலில், 100 சதவீத வாக்கு என்பதுதான் மாவட்ட நிா்வாகத்தின் இலக்கு என்றாா்.