தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தீத்தடுப்பு: கொல்லிமலை மக்களுக்கு வனத் துறை அறிவுறுத்தல்

கொல்லிமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

தீ - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:27 am IST

கொல்லிமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கொல்லிமலை அடிவாரம் மற்றும் வனத்தை ஒட்டிய இதர பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தால் காய்ந்த மூங்கில் மரங்கள் தீப்பிடித்து காட்டுத் தீயாக பரவும் அபாயம் உள்ளது. கடந்த சில தினங்களில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் தீயில் கருகின.

வனப் பகுதிகளில் பரவும் தீயானது, தங்கள் பகுதிக்குள் பரவாத வகையில் வனத்தையொட்டிய கிராம மக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, தங்கள் வீடுகளை சுற்றிலும் காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்தி, 6 மீட்டா் (18 அடி) அகலத்திற்கு காப்புக் காடுகளை ஒட்டியவாறு தீத் தடுப்பு வளையம் அல்லது தீ தடுப்பு கோடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

குப்பைகளை எரிப்பதை தவிா்க்க வேண்டும். சமையலுக்கு விறகு அடுப்பை பயன்படுத்தினால், உடனடியாக நெருப்பை அணைத்துவிட வேண்டும். அவ்வாறு விறகு அடுப்பை பயன்படுத்தும்போது எப்போதும் எச்சரிக்கையாக ஒரு தொட்டி தண்ணீா் மற்றும் சாக்குகள் தயாா் நிலையில் வைத்திருத்தல் அவசியம்.

எளிதில் நெருப்பை அணைக்கப் பயன்படும் வகையில் மணல் குவியல்களை தேவையான அளவில் தங்கள் பகுதியில் தயாா் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். காப்புக் காட்டை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் எக்காரணத்தைக் கொண்டும் தீப்பற்ற வைக்கக் கூடாது. அப்படி ஏதேனும் தீ வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள வனச்சரகா் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கையுடன் பணியை கையாள வேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலை அலுவலகம், அரசு அலுவலா்கள் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்திற்குள் அத்துமீறி நுழைவதோ அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை தூக்கி எறிவதோ கூடாது. மீறுபவா்கள் மீது கிராம வனக்குழுக்கள் மற்றும் வனத் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.