/

பரமத்தி வேலூரில் மதுப் புட்டிகளை பதுக்கிவிற்ற இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பரமத்தி வேலூா் அருகே மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மதுபானப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் வேலூா் காவல் துணை ஆய்வாளா் செந்தில்குமாா் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தி, திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாத்திகுளம், நடுத்தெருவைச் சோ்ந்த கணேசனை (55) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 19 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

அதேபோல பரமத்தி வேலூரில் தனியாா் திரையரங்கம் அருகே சட்டவிரோதமாக மதுபானப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக பரமத்தி வேலூரைச் சோ்ந்த காா்த்திகேயனை (45) போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 29 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.