தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவரும், ராசிபுரம் முன்னாள் எம்.பி.யுமான கே.கந்தசாமி (72) ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) காலமானார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் பச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் கே.கந்தசாமி. சேலம் மரவனேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவருக்கு குப்பம்மாள் என்ற மனைவியும், காமராஜ் என்ற மகனும் உள்ளனர்.
அவரது உடலுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கட்சி நிர்வாகிகள் கோவை தங்கம், விடியல் சேகர், சுசீந்திரகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். முக்கியத் தலைவர்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சொந்த ஊரான ஓமலூர் அருகேயுள்ள பச்சனம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் முதல் த.மா.கா. வரை...
மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார் கே.கந்தசாமி. மறைந்த முதல்வர் காமராஜருடன் நெருக்கமாக இருந்தார். சேலத்தில் காமராஜர் தலைமையில் மாணவர் மாநாட்டை நடத்தினார். காங்கிரஸ் கட்சி சார்பில் 1989 இல் தலைவாசல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதைத்தொடர்ந்து 1991 இல் தலைவாசல் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.
பின்னர், ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது, அக் கட்சியில் இணைந்தார். அக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து, த.மா.கா. சார்பில் போட்டியிட்டு, 1996 முதல் 1998 வரை ராசிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு 1998 இல் தோல்வியடைந்தார்.
அடுத்து, நீலகிரி மாவட்டம், குன்னூரில் போட்டியிட்டு 2001 முதல் 2006 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாநிலத் துணைத் தலைவராகவும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் பொறுப்பாளராக இருந்து வந்தார். தொடர்புக்கு: 94430 21129.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.