எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் புதன்கிழமை மாலை நேரிட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட மணியக்காரன் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
விவசாயக் கூலித்தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்துவரும் இப்பகுதியில் உள்ள வீடுகள் புதன்கிழமை மாலை தீப்பற்றின.
காற்றின் வேகத்தால் தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதால் 8 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தில் மணியக்காரன்காலனி பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் (38), பழனிசாமி (45), வீரன் (எ) சேலத்தான் (33) ,முனியாள் (65), பாப்பாத்தி (57), பழனிசாமி (42), பூபதி (24) உள்ளிட்டோரின் வீடுகள் முற்றிலும் எரிந்தன. இவ்விபத்தில் அதே பகுதியை சேர்ந்த பாப்பாயி (80) என்பவர் தீக்காயம் அடைந்தார். அவரை உதவிக்குழுவினர் மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த எடப்பாடி மற்றும் மேட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தொடக்கத்தில் சிறிய அளவில் பரவிய தீ, முனிரத்தினம் என்பவரின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் பெரும் விபத்தாக மாறியது. தீயில் 8 வீடுகளில் இருந்த 15-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்தில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து சங்ககிரி கோட்டாட்சியர் ராமதுரைமுருகன் ஆறுதல் கூறி, உணவு மற்றும் உடைகளை வழங்கினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள கோயில் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த சங்ககிரி காவல் கண்கானிப்பானர் அசோக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூலாம்பட்டி போலீஸார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.