/

பத்திரம், நகல் எழுதுவோர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

பத்திரம், நகல் எழுத்தர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:41 am

DIN

பத்திரம், நகல் எழுத்தர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அனைத்து பத்திரப் பதிவுகளையும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் இணையவழி மூலம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. 
இந்த நிலையில் இணையவழிப் பத்திரப் பதிவு முறையை ரத்து செய்து பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர் கடந்த பிப்.19 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
பத்திரப் பதிவுத் துறையில் இணையவழியில் பதிவு செய்யும் முறையைக் கைவிட வேண்டும். இணையவழிப் பத்திரப் பதிவை மேற்கொள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 
இணையவழி வசதிக்கேற்ப தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். இணையவழி மூலம் பதிவு செய்யும் போது ஏற்படும் காலதாமதத்தை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திர நகல் எழுத்தர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய முறையிலேயே பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என கோரி வரும் பிப்.23 ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் நடைபெறும் என்று பத்திரம், நகல் எழுத்தர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.