கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தற்கொலை செய்து கொண்ட ஜெய்சங்கரின் உடலைப் பெறுவதில் அவரது உறவினர்கள் தாமதம் காட்டி வருகின்றனர்.
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகில் உள்ள கன்னியாம்பட்டி, பனங்காடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சங்கர் (எ) ஜெய்சங்கர் (42). இவர் கொலைக் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கழுத்தை
அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கர்நாடக சிறைத் துறையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெய்சங்கரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க அவரது குடும்பத்தினர் தாமதம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அவரது உறவினர் அர்த்தநாரி (55) கூறுகையில், கடந்த புதன்கிழமை சிறையிலிருந்து ஜெய்சங்கர் தொலைபேசியில் குடும்பத்தினரிடம் பேசினார். அப்போது
அவர் நலமாக இருப்பதாகவும், குற்ற வழக்கிலிருந்து விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்புவேன் என்றும் கூறியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை
அதிகாலை திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜெய் சங்கரின் வழக்குரைஞருடன் கலந்த ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகக் கூறினார். ஜெய்சங்கரின் மனைவி பரமேஸ்வரி (38) கூறுகையில், குடும்பச் செலவுக்கே வழியின்றி மூன்று பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் தனக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்றே தெரிவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.