தம்மம்பட்டியில் இருந்து செல்லும் இரவு நேர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், எல்லையில் உள்ள, தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் இருந்து சேலம், ஆத்தூர், சென்னை, பெங்களூரு, ஈரோடு, கோவை, ராசிபுரம், திருச்சி, துறையூர், முசிறி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மார்க்கங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 20 நாள்களாக, தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூர், சேலம், ராசிபுரம், துறையூர், திருச்சி ஊர்களுக்கு, இரவு நேரத்தில் செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொலைதூர ஊர்களுக்கு செல்வோர் திண்டாடி வருகின்றனர்.
இதுதொடரும் நிலையில், சென்னையில் இருந்து விடுமுறைக்கு தம்மம்பட்டி பகுதி ஊர்களுக்கு வந்திருந்தவர்கள் நேற்று இரவு, ஆத்தூர் சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்லலாம் என, தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனால், இரவு 7.40, 8.20, 8.50, 9.15, 9.20 மணிக்கு தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் பேருந்துகள் ஒன்றுகூட வராததால், காத்திருந்தவர்கள் பெரிதும் அவதிக்குள்ளானர்.
அதுகுறித்து, விசாரித்தபோது, கடந்த 20 நாள்களாக இரவு நேர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள விவரத்தை அங்கிருந்த கடைக்காரர்கள் கூறினர். அதையடுத்து, காத்திருந்த அனைவரும், வாடகை கார், வேன்களில் சென்னை செல்வதற்காக, ஆத்தூர் பேருந்துநிலையத்துக்கு சென்றனர்.