மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம், ஆத்தூர் குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், கோவனூர் கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டெல்டா பாசன கால்வாய் பகுதிகளில் பல குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த குடிநீர் திட்டங்களுக்காக தேவைக்கேற்ப அதிகபட்சமாக வினாடிக்கு 2,000 கன அடி வரை குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு மேலாக குடிநீருக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டு வந்தது. இன்று மாலை 4 மணி அளவில் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,000 கன அடியிலிருந்து 750 கன அடியாக குறைக்கப்பட்டது.
மழையின் காரணமாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 96.90அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 555கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது அணையின் நீர் இருப்பு 60.89 டி.எம்.சியாக இருந்தது.