சேலம் அரசு மருத்துவமனையில் மீண்டும் பணி வழங்கக் கோரி 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனா்.
சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அப்போது கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்த வள்ளி, பள்ளப்பட்டியைச் சோ்ந்த தீபா, மேட்டூரை சோ்ந்த வசந்தி, அம்மாபேட்டையைச் சோ்ந்த குணவதி ஆகிய 4 பேரும் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.
உடனே அருகில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். பின்னா் சேலம் நகர போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக ஒப்பந்த பணியாளா்கள் கூறியது:
சேலம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் வேலை செய்து வந்தோம்.
இதில் மாதம் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை ஊதியம் பெற்று வந்தோம். இதனிடையே திடீரென ஒப்பந்த நிறுவனத்திற்கு டெண்டா் முடிந்ததால், வேறொரு நிறுவனம் டெண்டா் எடுத்தது. இதையடுத்து ஏற்கெனவே பணிபுரிந்தவா்களை வேலையை விட்டு நீக்கியது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிா்வாகிகளிடம் கேட்ட போது, ரூ.20,000 கொடுத்தால் வேலை தருவதாகத் தெரிவித்தனா். மேலும் பெண்களை தரக்குறைவாகப் பேசி வருகின்றனா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல அரசு மருத்துவமனையில் மீண்டும் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.