வாழப்பாடி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பயிற்சி காவலர் உள்பட இருவர் பலியானார்கள்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஊராட்சி கீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (27). இவர், தர்மபுரி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி பெற்று வந்தார். இருவரும் புழுதிக்குட்டை பகுதியில் இருந்து கீரப்பட்டி நோக்கி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
கீரப்பட்டி சண்முகம் தோட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்(26). என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு மணிகண்டன் இறந்தார்.
இவரை தொடர்ந்து, இவரது நண்பரான பயிற்சி காவலர் கிருஷ்ணனும் சனிக்கிழமை இரவு பலியானார். அர்ஜுனன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பயிற்சி காவலர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.