மேட்டூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் உள்ளது அண்ணா நகர் மேட்டூர் ரயில் நிலைய பகுதி, தங்கமாபுரிபட்டினம், கவிபுரம் உள்ளிட்ட பகுதிகள். இங்கு குடிநீர் விநியோகம் சீராக இல்லை. எனவே, குடிநீர் விநியோகத்தை சீராக்கக் கோரி மேட்டூர் நகராட்சி ஆணையருக்கு பலமுறை பொதுமக்கள் மனு அளித்தும் குடிநீர் விநியோகத்தை சீராகவில்லை.
மேட்டூர் அணைக்கு மிக அருகில் இருந்தும் தங்களுக்கு குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆண்களும், பெண்களும் நூற்றுக்கு மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேட்டூர் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினார்.
இதையும் படிக்க- நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாதா காரணத்தால் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு உறுதிமொழி தேவை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.
நகராட்சி ஆணையர் குடிநீர் விநியோகம் சீராக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் தர்மபுரி பட்டினம் பவானி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.