

எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கையில் கொடூர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து சுற்றித்திரியும் கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கோண பைப் குடியிருப்பு, பூலாம்பட்டி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் முகமூடி அணிந்து இரவு நேரங்களில் சுற்றித் திரிவதாக புகார் எழுந்ததுள்ளது. இந்நிலையில் நேற்று (ஞாயிறு) நள்ளிரவு நேரத்தில் எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையில் உள்ள கோணபைப் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள குடியிருப்புகளில் அடையாளம் தெரியாத சில நபர்கள் முகமூடி அணிந்து சுற்றித் திரிந்தனர்.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
குடியிருப்புகளில் நுழைய முயன்ற அவர்களை அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்து விரட்டியதால், அவர்கள் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர்கள் கையில் வீச்சரிவாள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் நோக்கில் அப்பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளை சுற்றி வந்தது தெரியவந்தது.
இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மேலும் எடப்பாடி நகரம் முழுவதும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் எனவும், எடப்பாடி பூலாம்பட்டி சாலையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.