திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 249 நாட்களுக்குப் பிறகு நிறுத்தம்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 249 நாட்களுக்குப் பிறகு இன்று நிறுத்தப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2023, 1:54 pm

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 249 நாட்களுக்குப் பிறகு இன்று நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. விதிகளின்படி ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவேண்டும். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று மாலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் குறித்த நாளான ஜூன் 12 க்கு முன்பாக மே 24ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Story image

முப்போக சாகுபடி முடிவுக்கு வந்ததால் 249 நாட்களுக்கு பிறகு இன்று மாலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இன்று மாலைவரை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 205 டி.எம்.சியும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 8.40 டி.எம்.சி திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணை மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 50 மெகாவாட் மின்சார உற்பத்தியும், சுரங்க மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 200 மெகாவாட் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, குதிரைக்கல்மேடு உள்ளிட்ட 7 கதவணைகளில் 210 மெகாவாட் மின் உற்பத்தியும் தடைபட்டுள்ளது. இந்த நீர் மின் நிலையங்கள் காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து  தண்ணீர் திறக்கப்படும்போது நீரின் விசையை கொண்டு மின் உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டவையாகும். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்வரை காவிரி கரையில் செயல்படுத்தப்படும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். 

அதிகபட்சமாக வினாடிக்கு 2,000 கனஅடி வரை குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓரிரு நாட்களில் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 103 அடியாக இருப்பதால் எதிர்வரும் நீர்பாசன ஆண்டில் குறித்த நாளான ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.